பதிவு செய்த நாள்
28
நவ
2022
04:11
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச. 6ல் மலைமேல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது.
கொடியேற்றம்: இன்று காலை கொடிப் பட்டம் யானை தெய்வானை மீது வைத்து ரத வீதிகளில் மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கொடி கம்பத்தில் கட்டப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். பட்டு, மாஇலை, தர்ப்பை புல் வைத்து கொடி கம்பத்தில் கட்டப்பட்டு அடிப்பாகத்தில் பால் உள்பட பல்வகை திரவிய அபிஷேங்கள் நடந்தது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
சுவாமி வீதி உலா: டிச.; 7வரை தினம் காலை சிம்மாசனம், தங்கச்சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க குதிரை, காமதேனு வாகனங்களில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை: திருவிழா 6ம் நாளான டிச. 3ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, டிச. 4 காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலையில் நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளும், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர்.
மஹா தீபம்: டிச. 5ல் பட்டாபிஷேகம், டிச. 6 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் மஹாதீபம், இரவு சொக்கப்பனை தீபக் காட்சி, டிச. 7ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.