தெக்கூரில் மிளகாய் சாந்து சித்தர் குருபூஜை விழா : குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2022 03:11
மானாமதுரை: மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் நடைபெற்ற மிளகாய் சாந்து சித்தர் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் முத்திருளாண்டி சுவாமிகள் எனப்படும் மிளகாய் சாந்து சித்தர் ஜீவசமாதி உள்ளது.இங்கு சுவாமிகளுக்கு மிளகாயை அரைத்து அபிஷேகம் செய்தால் நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளதால் குழந்தை இல்லாத தம்பதிகள் ஏராளமானோர் இங்கு வந்து அபிஷேகம் செய்து குழந்தை பாக்கியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா இன்று நடைபெற்றதை தொடர்ந்து சுவாமிகளுக்கு அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு 11 வகை பொருட்களால் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. விழாவில் தெக்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மிளகாய் சாந்து சித்தர் தலைமுறையைச் சேர்ந்தவர்களும், தெக்கூர் கிராமத்தினரும் செய்திருந்தனர்.