பதிவு செய்த நாள்
01
டிச
2022
07:12
பழநி: பழநி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது.
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா (நவ.30) நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழா டிச.,6 வரை நடைபெற உள்ளது. நேற்று மாலை மணிக்கு மலைக்கோயிலில் சாயரட்சை பூஜையில் விநாயகர், மூலவர்,சண்முகர், சின்ன குமாரசுவாமி, துவாரபாலகர்கள் மயில்வாகனம் ஆகியவற்றிற்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. சண்முகார்ச்சனை, தீபாதரணை, தங்க சப்பரத்தில் எழுந்தருளல், சின்னகுமார சுவாமி புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெற்றது. உதவி ஆணையர் லட்சுமி, கண்காணிப்பாளர் முருகன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கார்த்திகை விழா: டிச.5., அன்று சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றுதல் நடைபெறும். திருக்கார்த்திகை (டிச.,6.,) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜையும், மதியம் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை சாயரட்சை பூஜை, சின்னகுமாரசுவாமி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வந்து தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பின் பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடைபெறும். மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும்.