பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2022 08:12
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா நேற்றுமுன்தினம் இரவு பொங்கல் படையில் வைக்கும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.
இது கோயிலில் நவ., 22 ல் செவ்வாய் சாட்டு விழா துவங்கி எட்டு நாட்கள் நடந்தது. இதன்படி தினமும் கோயில் சிவாச்சாரியார்கள், சிப்பந்திகள், பணியாளர்கள், அறங்காவலர்கள் என ஒவ்வொரு நாளும் பூஜைகளை முன்னின்று நடத்தினர். தொடர்ந்து 8 நாட்களும் இரவு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிறைவு நாளான நவ., 29 அன்று மதியம் யாக பூஜைகள் துவங்கி, மாலை மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் புனித தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் நீல வண்ண பட்டுடுத்தி அருள் பாலித்தார். இரவு 10:00 மணிக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடந்து பொங்கல் படையில் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிர வைசிய சபை நிர்வாகிகள், பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.