சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களை பின் தொடரும் நாய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2022 08:12
தார்வாட்: சபரிமலை செல்லும் பக்தர்களுடன், நாய் ஒன்று பின் தொடர்ந்து செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது.
கர்நாடக மாநிலம் தார்வாட் அருகே உள்ள மங்கலஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சு, 40; ரவி, 42; நாகன கவுடா, 35. மூவரும் நவம்பர் 20ம் தேதி சபரிமலைக்கு இருமுடி கட்டி பாதயாத்திரையாக புறப்பட்டனர். அடுத்த நாள் இரவு தார்வாட் பைபாஸ் சாலையில் மூவரும் இரவு உணவு சாப்பிட அமர்ந்தனர். அப்போது தெருநாய் ஒன்று அவர்களிடத்தில் வந்தது. அதனால், நாய்க்கும் உணவளித்தனர். பின்னர் அங்கிருந்து பாதயாத்திரையைத் தொடர்ந்தபோது, நாயும் பின்னால் சென்றது. பக்தர்கள் மூவரும் உத்தர கன்னடா மாவட்டத்தைக் தாண்டி சென்ற போது, பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அவர்கள் நாயை விரட்ட முயன்றும் முடியவில்லை. விடாமல் பின் தொடர்ந்தது. இதனால் வேறு வழியில்லாமல் நாயையும் உடன் அழைத்து செல்கின்றனர். தற்போது 500 கி.மீ., பாதயாத்திரையை நிறைவு செய்துள்ளனர். சபரிமலைக்கு இன்னும் 500 கி.மீ., மேல் பயணிக்க வேண்டி உள்ளது. அதுவரை தங்களுடன் நாயை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.