பதிவு செய்த நாள்
14
டிச
2022
02:12
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம், வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜன., 6ல், ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
உலகப் புகழ்பெற்ற கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய இருதிருவிழாக்கள் பிரசித்தி பெற்றதாகும். மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம், வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 29ம் தேதி துவங்கி, ஜனவரி 4ம் தேதி வரை, தினசரி சுவாமி வீதியுலா நடக்கிறது. தேர்த்திருவிழா ஜனவரி 5ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 8:00 மணிக்கு, ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் சுவாமிக்கு ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது. ஜனவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், காலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை, சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மஹாபிஷேகம் நடக்கிறது. பின், காலை 10:00 மணிக்கு, சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலாவுக்கு பின், பகல் 2:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. ஜனவரி 7ம் தேதி, பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவோடு ஆருத்ரா தரிசன உற்சவம் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். விழா நடைபெறும் 10 நாட்களும் மாலை 6:00 மணிக்கு, சாயரட்சை பூஜையில் சித்சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து, திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.