பதிவு செய்த நாள்
15
டிச
2022
11:12
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நடந்தது. பாபநாசம் லோகநாயகி சமேத பாபவிநாசர் கோயிலின் கும்பாபிஷேகம் 2005ம் ஆண்டில் நடந்தது.
14 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஆகமவிதி இருப்பதால் பக்தர்கள் பாபநாசம் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்பு கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு ய்யப்பட்டு நேற்று பாலாலயம் நடந்தது. பாலாலயத்தை முன்னிட்டு நேற்று முன்தினம்(13ம் தேதி) கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜையும் நடந்தது. நேற்று (14ம் தேதி) காலை விநாயகர் பூஜை, சூரிய பூஜை, சோமகும்ப பூஜை, மகா பூர்ணாகுதி, பாலாலயமும் இதனை தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, பாபநாசம் கோயில் ஆய்வாளர் கோமதி, நிர்வாக அதிகாரி போத்திச்செல்வி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் சுரேஷ் பெருமாள், விக்கிரமசிங்கபுரம் திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர் சொரிமுத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.