பதிவு செய்த நாள்
16
டிச
2022
07:12
பழநி: பழநி மலைக்கோயில் மூலஸ்தான கும்பாபிஷேகம் 2023, ஜன., 27 ல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலய பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக பணிகள் மலைக்கோயில் சன்னதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் கூறுகையில், "பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம், பக்தர்கள் எதிர்பார்ப்பின் படியும், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்த படியும் நடைபெற டிச.,25, ஞாயிறு, உத்திராட நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மூகூர்த்தக்கால் நடப்படும். பூர்வாங்க பூஜைகள், கணபதி ஹோமத்துடன் 2023, ஜன.,18 காலை 9:00 மணிக்கு மேல் துவங்கும். எட்டு கால யாக சாலை பூஜைகள் நடைபெற 2023, ஜன., 23ல் முதல் கால வேள்வி நடைபெறும். அதன்பின் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று பாத விநாயகர் கோயில் முதல் இரட்டை விநாயகர் கோயில் வரை உள்ள மலைக்கோயில் பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு 2023, ஜன, 26ல் காலை 9:50 மணி முதல் 11:00 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும்.
2023,ஜன.,27, வெள்ளிக்கிழமை, ரேவதி நட்சத்திரம் சஷ்டி திதி அமிர்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 8:30 மணிக்கு மேல் காலை 9:30 மணிக்குள் கும்ப லக்கினத்தில் மலைக்கோயில் மூலஸ்தான சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தன்று மலைக் கோயிலில் பக்தர்கள் அனுமதிப்பது பாதுகாப்பு நடவடிக்கை குறித்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின் தெரிவிக்கப்படும். என்றார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், மணிமாறன், சத்யா, கோயில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.