பதிவு செய்த நாள்
16
டிச
2022
11:12
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாட அமைப்பிற்குள் நாயக்கர் காலத்து கணவன்,மனைவி நடுகல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நத்தம் அருகே கோபால்பட்டி பகுதியில் திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழு வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோபால்பட்டியிலிருந்து வி.மேட்டுப்பட்டி செல்லும் சாலையின் குளக்கரையில் மாட அமைப்பிற்குள் உள்ள 17-ம் நூற்றாண்டு கணவன் மனைவி நடுகல்லை கண்டுபிடித்தனர். மேலும் ஆய்வு அறிக்கையில் அவர்கள் கூறியதாவது நடுகல் பாதுகாப்பாக மாட அமைப்பிற்குள் உள்ளது. மேலும் நடுகல்லின் இடது புறம் ஆண் சிற்பத்தில் தலையில் அள்ளி முடிந்து சவுரி கொண்டையும், அக்கொண்டை முடிச்சில் தொங்கும் குஞ்சமும், ஆணின் காதில் வளை குண்டலமும், இரு கரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையும், இடையில் வாள் இடைவாரிலிருந்து நீண்டு தொங்குகிறது. இடுப்பில் இடை கச்சை ஆடை, தார் பாச்சி கட்டிய அமைப்பும் அதிலிருந்து கெண்டை கால் வரை மூடிய நிலையில் இடை கச்சை ஆடையுள்ளது.
பெண் சிற்பத்தில் கொண்டை வலது புறமும், காதில் வளைகுண்டலமும், நெஞ்சில் ஆரமும், மார்பில் கச்சையும், இடது கை தொங்கு கரம் (டோலி முத்திரையும்), வலது கரம் இடுப்பில் வைத்தபடியும், இடை ஆடை இடுப்பில் சுற்றி கெண்டை கால் வரை நீண்டுள்ளது. ஆடை அமைப்பில் கொண்டை அமைப்பில் இந்நடுகல் 17-ம் நூற்றாண்டில் கணவன், மனைவி நடுகல் ஆகும். இவர் இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்திருப்பார் எனக் கூறினர்.