சதுரகிரியில் மார்கழி மாதபிறப்பு வழிபாடு; வாக்குவாதத்திற்கு பிறகு பக்தர்கள் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 02:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தநிலையில் பக்தர்களின் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
இக்கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், டிசம்பர் 14 அன்று மாலையில் வனப்பகுதியில் பெய்த மழையினால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல, பக்தர்கள் வருகை அதிகரித்தது. ஆனால், வனத்துறை பக்தர்களை அனுமதிக்க வனத்துறை மறுத்தது. இதனால் தானிப்பாறை கேட் முன்பு குவிந்த பக்தர்கள் தற்போது மழை பெய்யாததால் தங்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸ், வனத்துறை அதிகாரிகள் ஓடைகளில் நீர்வரத்து அளவை பார்வையிட்டு அதன் பின்பு காலை 9:00 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதித்தனர். சுவாமி தரிசனம் செய்தவுடன் கீழ இறங்க அறிவுறுத்தப்பட்டனர். காலை 10:30 மணி வரை சுமார் ஆயிரம் பக்தர்கள் வரை மலை ஏறினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதியில் மார்கழி மாத பிறப்பு வழிபாடு பூஜைகளை, கோயில் பூசாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.