திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு மாதத்தின் முதல் நாளான நேற்று துவங்கப்பட்டது. அதிகாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை மூலவர் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து திருப்பாவை சாற்றுமறை, காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை நடை சாத்தப்பட்டு நித்திய பூஜைகள் நடந்தது. காலூ 10:00 மணி முதல், மதியம் 12:30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து 5:45 மணி முதல் 7:00 மணி வரை நித்திய பூஜைகள் நடந்தது. இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மார்கழி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக வரும் 23ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஜனவரி 3ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் அதனைத் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் செய்து வருகிறார்.