பதிவு செய்த நாள்
17
டிச
2022
03:12
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நேற்று துவங்கியது.
கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கியது. இதனையொட்டி, பெருமாள் தாயாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து 30 நாட்கள் நடக்கிறது. கண்ணன் பாகவதர் தலைமையிலான குழுவினர் முக்கிய வீதிகளின் வழியாக ராமநாம சங்கீர்த்தன பஜனை செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல் சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர், முத்துமாரியம்மன், திரவுபதி அம்மன், கங்கையம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கற்பக விநாயகர், சக்தி விநாயகர், அண்ணா நகர் துர்கையம்மன் ஆகிய கோவில்களிலும் மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
திருக்கோவிலுார்: நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு, முதல் நாளான நேற்று துவங்கியது. அதிகாலை 4:30 முதல் 5:30 மணி வரை மூலவர் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து திருப்பாவை சாற்றுமுறை, காலை 9:00 முதல் 10:00 மணி வரை நடை சாத்தப்பட்டு, நித்திய பூஜைகள் நடந்தது. காலை 10:00 முதல், மதியம் 12:30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து 5:45 முதல் 7:00 மணி வரை நித்திய பூஜைகள் நடந்தது. இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மார்கழி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக வரும் 23ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஜனவரி 3ம் தேதி வைகுண்ட ஏகாதசி, அதனைத் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் தேகளீச ராமானுஜாச்சார்யார் சுவாமிகள் அறிவுரைபடி, தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் செய்து வருகிறார்.