ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கட்டண தகவல் பலகை இல்லாததால், பக்தர்கள் குழப்பம் அடைகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை தினமும் ஏராளமான பக்தர்கள் நீராடுகின்றனர். இதனை நீராட பக்தரிடம் தலா ரூ. 25 கட்டணமாக கோயில் நிர்வாகம் வசூலித்து, தீர்க்கம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்களுக்கு ரூ.12 ஐ வழங்குகிறது. இந்நிலையில் தீர்த்த கட்டணம் குறித்த தகவல் பலகை பக்தர்கள் பார்வைக்கு தெரியும்படி கோயில் நிர்வாகம் வைக்காமல், சிறிய பேனரில் நீராட செல்லும் நுழைவு வாயிலில் வைத்துள்ளனர். இதுவும் வீசும் காற்றில் தாக்கு பிடிக்காமல் கிழிந்து தொங்கிய நிலையில் கிடக்கிறது. இதனால் வெளியூர் பக்தர்களுக்கு கட்டணம் குறித்த தகவல் தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். இதனால் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளதால், பக்தர்கள் பாதிக்க கூடும். எனவே பக்தர்கள் நலன் கருதி பெரிய அளவிலான கட்டண தகவல் பலகை வைக்க கோயில் நிர்வாகம் முன் வர வேண்டும்.