மேட்டுப்பாளையம்: காரமடை அருகே அனுமந்தராய சுவாமி கோவிலில், மார்கழி மாத முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது.
காரமடை அடுத்த மருதூரில், மிகவும் பழமை வாய்ந்த, அனுமந்தராய ஜெய மங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெறும். நேற்று மார்கழி மாத முதல் சனிக்கிழமையை அடுத்து, கோவிலில் விழா நடைபெற்றது. காலையில் நடை திறந்து மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செந்தூரத்தில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. செந்தூரக் காப்பு அலங்காரத்தில், ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரமடை சுற்று வட்டார பஜனை குழுவினர் பஜனை பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோன்று சிறுமுகையை அடுத்த இடுகம்பாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.