பதிவு செய்த நாள்
19
டிச
2022
07:12
நாமக்கல்: மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. நாமக்கல்லில், 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை ஆஞ்சநேயருக்கு, 1,008 வடைமாலை சாற்றப்பட்டது. இதையடுத்து நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய்துாள், 1,008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம் போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள், தரிசனத்துக்கு நேற்று வந்தனர். இதனால் நாமக்கல் கோட்டை பகுதியில், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.