சோமனூர்: சோமனூரில் நடந்த ஐயப்ப சுவாமி ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோமனூர் அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 12 ம் ஆண்டு ஐயப்ப சுவாமி ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி திரு வுருவ படத்துடன் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து ஜெண்டை , மேள, தாளத்துடன் ஊர்வலம் துவங்கியது. செந்தில் நகர், சோமனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் சரண கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். செந்தில் நகர் தனியார் மில் வளாகத்தில் ஐத்தான் குருசாமி தலைமையில், மாலை அணிந்து விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்கள், சரண கோஷம் மற்றும் பஜனை பாடல்களை பாடினர், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பிரசாதம் மற்றும் அன்னதானம் நடந்தது.