பதிவு செய்த நாள்
20
டிச
2022
05:12
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதேசி வைபவம் நடந்தது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான, காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று, மார்கழி மாத கிருஷ்ணன் பக்ஷ ஏகாதசி வைபவம் நடந்தது. காலை, 5:00 மணிக்கு நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 9:00 மணி அளவில் விஷ்வக்சேனர் பூஜை, புண்ணிய வசனம், கலச ஆவாஹனம் ஆகிய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பிறகு நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட, 18 வகை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு அலங்காரம் செய்த வெள்ளி சிம்மாசனத்தில், மேளதாளம் முழங்க, அரங்கநாதர் சுவாமி கோவிலை வளம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உச்சிக்கால பூஜை சற்று முறை சேவித்த பிறகு, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தர்கள், அலுவலக பணியாளர்கள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.