பதிவு செய்த நாள்
21
டிச
2022
09:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் சீசன் கடையில் வியாபாரம் படுஜோராக உள்ளது.
2020-22 ல் கொரோனா ஊரடங்கினால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு விதித்தனர். மேலும் பொருளாதார நெருக்கடியால், அச்சமயத்தில் பெரும்பாலான பக்தர்கள் கோயிலுக்கு செல்லவில்லை. தற்போது கொரோனா தளர்வு, பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியதால், ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து ஆன்மிக தலங்களை தரிசிக்கின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
சீசன் கடைகள் : பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மதுரை, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு சேர்ந்த வியாபாரிகள் 100 க்கு மேலான சீசன் கடைகள் அமைத்து கம்பளி, பருத்தியில் தயாரித்த போர்வை, சொட்டர், ரெயின் கோட், குழந்தைகளுக்கான அலங்கார ஆடைகள் உள்ளிட்ட பலரக துணிகளை ரூ. 200 முதல் ரூ. 500 வரை விற்பதால், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால், விற்பனையும் படுஜோராக உள்ளது.