பழநி: பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வரும் வழியில் பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். பழநிக்கு தற்போது பாதயாத்திரையாக வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் வர துவங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக சிறுசிறு விபத்துகளில் வாகனங்களில் வரும் பக்தர்கள் சிக்கி அவதிப்படுகின்றனர். இந்நிலையில் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதயாத்திரை பக்தர்கள் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதர் மண்டி உள்ள இடங்களை தூய்மை செய்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஒளிரும் பட்டைகள் மற்றும் குச்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழநி வரும் பாதையில் பயணிக்கும் பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதயாத்திரை பக்தர்களை கவனித்து ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்க வேண்டும். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை ஆங்காங்கே மேம்படுத்த வேண்டும். பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கும் உணவு பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். சென்னை, மீஞ்சூரை சேர்ந்த பாதயாத்திரை பக்தர் பொன் சாமி கூறுகையில்,"சாலை ஓரங்களில் உள்ள பாதை மோசம் அடைந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் வசதிகளை பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்க வேண்டும்." என்றார்.