பதிவு செய்த நாள்
22
டிச
2022
08:12
திருவாரூர் : ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் 23ஆம் தேதி ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேகமும், நாளை ராமச்சந்திர பிரபுவுக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சித்திர கூட சேத்திரத்தில் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேய சுவாமி தனித்தனி சன்னதிகளில் எழுந்துருளி உள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் ஹனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 19ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து நாளை 23ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம், ஸ்ரீ வித்யாபீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த மகா சுவாமிகள் அருள் முன்னிலையில் விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், ராமச்சந்திர பிரபு, சீதா பிராட்டியாருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவருளையும், குருவருளையும் பெற வேண்டும் எனவும் திருக்கல்யாணம் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம், பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆகியன அருட்பிரசாதமாக வழங்கப்பட உள்ளன எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மாதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.