பதிவு செய்த நாள்
22
டிச
2022
10:12
அருப்புக்கோட்டை" அருப்புக்கோட்டை அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய விஜய நகர மன்னர் காலத்திய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை திருச்சுழி அருகே நரிக்குடி வேலங்குடியில், 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு ஒன்றை மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விஜய நகர சாம்ராஜ்யத்தின் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்திய இந்த கல்வெட்டில் புக்கரசர் வேலங்குடி என்னும் ஊர் நான்கு வேதங்களில் வல்ல பிராமணர்களுக்கு (வித்வமகாஜங்கள்) தானமாக கொடுக்கப்பட்டதாக செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பாண்டிய நாட்டு வரலாறு ஆய்வு மையத்தின் செயலர் சாந்தலிங்கம் கூறியதாவது, இந்த ஊரின் வடபுறம் வெயிலு கந்தம்மன் கோயிலில் உள்ள திடலில் ஒரு கல் தூணில் இந்த கல்வெட்டு உள்ளது. இதை படி எடுத்து படித்ததில், இந்த கல்வெட்டு கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் (1503 -- 1529) இப்பகுதியின் சிற்றரசன் திம்மண்ண நாயக்கர் என்பவரால், வேலங்குடி கிராமம் இங்கு நான்கு வேதங்கள் கற்ற பிராமணர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்டது என்ற செய்தி உள்ளது. வேலங்குடி என்னும் கிராமம் பொக்கரசர் வேலங்குடி என்று அழைக்கப்பட்டது. இந்த ஊர் சுந்தரபாண்டிய வளநாடு என்றும், இவ்வூரின் மற்றொரு பெயராக சென்வைநாயக்கபுரம் என்றும் உள்ளது. பொக்கரசர் என்ற பெயர் 1336 ல், ஹம்பியை தலைநகராகக் கொண்ட விஜயநகர பேரரசை நிறுவிய ஹரிஹரர், புக்கர் என்ற சகோதரர்களின் ஒருவரின் பெயர்.
கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சி காலத்தில் ராமேஸ்வரத்திற்கு யாத்திரை வந்துள்ளார். அவர் வரும் வழியில், அல்லது திரும்பும்போது மதுரையில் சில காலம் தங்கி இருந்தார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், தான் பிறந்த புனர்பூச நட்சத்திர திருநாளில் ஒரு சிறப்பு பூஜை ஏற்பாடு செய்து, அதன் செலவுக்காக 500 பொற்காசுகளும், தனிச்சியம் என்ற திருஞானசம்பந்தநல்லூரையும் கோயிலுக்கு கொடுத்துள்ளார் என்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கல்வெட்டு கூறுகிறது. இத்துடன் மதுரை அழகர் கோயிலிலும் சில திருப்பணிகளை செய்து, இவர் செய்துள்ளார். மூன்று நாட்கள் அழகர் கோயிலில் தங்கி இருந்துள்ளார். இன்றைய ராக்காட்சி அம்மன் சன்னதி பின்புறத்தில் ஒரு மண்டபத்தில் கிருஷ்ணதேவராயரின் முழு உருவ சிற்பம் உள்ளது. அழகர்கோயில் கல்வெட்டு ஒன்றில் திம்மன் நாயக்கர் என்ற அதிகாரி குறிப்பிடப்படுகிறார். இதே அதிகாரி தான் வேலங்குடி கிராமத்தையும் கொடை அளித்துள்ளார். இன்றைய வேலங்குடி கிராமத்திற்கு மதுரை வைகை ஆற்றில், திருப்பாச்சேத்தி என்ற இடத்தில் இருந்து கால்வாய் ஒன்று பிரிந்து, வேளாண் பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த கால்வாய்க்கு பொக்கரசர் கால்வாய் என்ற பெயர் வழங்கி உள்ளது. கல்வெட்டின் முடிவில் குடையும், கொடி மரமும் பூரண கும்பமும் கோட்டு ஓவியங்களாக செதுக்கப்பட்டுள்ளன.