பெரியகுளம்: தாமரைக்குளம் மலை மேல் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பக்தர்கள் 25 பேர் மார்கழி முழுவதும் பஜனை பாடி, ஆனந்தம், பேரானந்தத்தை ஏற்படுத்துகின்றனர்.
மார்கழியே வருக ஆன்மிக ஒலி (பஜனை) தருக என்ற சொல்லாடலுக்கு ஏற்ப பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயில் பராமரிப்பு குழுவினரால் 17 ஆண்டுகளாக மார்கழி மாதம் முழுவதும், புல்லாங்குழல் இசைக்கும் கிருஷ்ணர் பல்லாக்கை தூக்கிக் கொண்டு திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை பாடிக்கொண்டே ஜால்ரா இசைத்தபடி சிறுவர்கள், ஆண், பெண் பக்தர்கள் 25 பேர் பாடிக்கொண்டும், பாடலுக்கு பின்னணி இசை சேர்ப்பாக இரு கைகளை தட்டிக்கொண்டு, அதிகாலை 5 மணிக்கு தாமரைக்குளம் லட்சுமிநாராயணன் பெருமாள் கோயிலில் துவங்கி, அம்மன் சன்னதி தெரு உட்பட 10க்கும் அதிகமான தெருக்களில் தாமரைக்குளம் முழுவதும் வலம் வந்து மலை மேல் வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் காலை 8 மணிக்கு நிறைவு செய்கின்றனர். இந்தப் பஜனை குழுவினரை ஒவ்வொரு தெருக்களிலும் பொதுமக்கள் வரவேற்று பல்லாக்கில் வலம் வரும் கிருஷ்ணரை வணங்கி, பூக்கள் தூவி பஜனைக் குழுவினரை உற்சாகப்படுத்தினர்.
பஜனைக்குழு அஜித்பாண்டி கூறுகையில்: அதிகாலை ஐந்து மணிக்கு பஜனை துவங்கும். பஜனை குழுவினர் அதிகாலை 4:45 மணிக்கு வந்து விடுவார்கள். மூன்று மணி நேரம் பஜனைபாடும் ஆனந்தம், பேரானந்தம் அடைகிறோம் என்றார். மார்கழி மாதம் நிறைவு நாளில் கோயில்களில் பசுக்களுக்கு கோபூஜை நடக்கும் என்றார்.