பதிவு செய்த நாள்
03
செப்
2012
10:09
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு நடந்த தேர் பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படும், புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஆண்டுதோறும், ஆகஸ்ட் 29ம் தேதி, ஆண்டு திருவிழா துவங்கி, செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கும். விழா நாட்களில், தேவாலய மேல், கீழ் கோவில்களில், நாள்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, கொங்கனி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில், திருப்பலியும், மாலையில் தேர் பவனியும் நடக்கும். இரண்டு நாட்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள், வேளாங்கண்ணியில் குவிந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்ணமிகு தேரில், மாதா எழுந்தருளி, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.தேர் பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.