பதிவு செய்த நாள்
05
செப்
2012
11:09
கும்பகோணம்: கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயிலில் நேற்று மர்ம நபர்களால் இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டது. கி.பி., 4ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததும், சோழர்கால அரசர்களான ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் திருப்பணி செய்த தலமாக விளங்குவது திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோவிலாகும்.தேவலோக இந்திரன் அனைத்து தெய்வங்களையும் வணங்கிவிட்டான். ஆனால், விநாயகரை வணங்க மறந்துவிட்டதால் இந்திரன் நேரடியாக திருவலஞ்சுழிக்கு வந்து அங்குள்ள கடல் நுரையால் ஆன வெள்ளை விநாயகரை விநாயகர் சதுர்த்தி தினத்தில் வழிபட்டததாக ஐதீகம்.அதே நேரத்தில், மகாவிஷ்ணு மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் வரலாற்று சிறப்புகள் கூறுகின்றன.சோழமன்னன் ராஜராஜன் போருக்கு போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரையும், அஷ்டபுஷகாளியையும் வழிபட்டு பின்னர் தான் போருக்கு சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகிறது. இக்கோயில் சுவாமிமலை முருகன் கோயிலின் இணை கோயிலாகும். இந்த தலத்தில் இறைவன் கபர்தீஸ்வரரும், பிரகன்நாயகி என்ற அம்பாளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகின்றனர். அம்பாள் சன்னதி தனியாக வெளிப்பிரகாரத்தில் உள்ளது. அம்பாள் சன்னதியிலேயே அஷ்டபுஷகாளியும் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நேற்றிரவு மர்ம நபர்கள் அம்பாள் சன்னதியின் வடக்கு பக்கத்தில் உள்ள கதவின் தாழ்பாளை கம்பி மூலம் நெம்பி உள்ளே வந்து அம்பாள் சன்னதியில் இருந்த உண்டியலை உடைத்தனர். அதில், இருந்த மூன்று பூட்டுகளும் உடைத்து அருகில் வீசப்பட்டது. உண்டியலில் பணம், காசுகள் திருட்டு போனது. அஷ்டபுஷகாளி சன்னதி எதிரே உள்ள உண்டியலும் உடைக்கப்பட்டுளது. இந்த சன்னதியில் லாக்கர் டைப்பில் பூட்டு இருந்ததால் அந்த உண்டியலை உடைக்கமுடியவில்லை. ஆனால், அந்த உண்டியலிலிருந்த மற்ற இரண்டு பூட்டுகளையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.பிரகன்நாயகி சன்னதியில் பூட்டியிருந்த பூட்டும் உடைக்கப்பட்டு அம்மன் நெற்றியில் இருந்த கண்புருவம் திருடப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் இந்த கோயிலுக்குள் வந்து திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து கேள்விபட்டதும் கும்பகோணம் டி.எஸ்.பி., சிவபாஸ்கர், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் (பொ) மகாதேவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.சுவாமிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.