பதிவு செய்த நாள்
17
ஜன
2023
08:01
திருவண்ணாமலை: உழவர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தி பகவான் மற்றும் சூரிய பகவானுக்கு, அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன் காட்சி அளித்தனர்.
உழவனின் நண்பனாக விளங்கும் கால்நடைகளுக்கு, மாட்டு பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள, 12 அடி உயர பெரிய நந்தி பகவான், கோவில் கொடிமரம் அருகிலுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள நந்திக்கு, சிறப்பு அபிஷேக, பூஜை செய்யப்பட்டது. பின்னர், பெரிய நந்தி பகவானுக்கு, வண்ண மலர்கள், ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பலவகை பழங்கள், லட்டு, அதிரசம், முருக்கு, சீடை, பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு தின்பண்டங்கள், கத்திரி, முருங்கை, அவரை, வாழைக்காய் என பல காய்கறிகள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் என, 108 வகையான மாலைகளால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது.
காலை, 6:00 மணிக்கு, உண்ணாமுலைம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், நந்திபகவானுக்கு காட்சி அளித்தனர். பின்னர், ராஜகோபுரம் அருகிலுள்ள திட்டி வாயலில், சூரியபகவானுக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மனும் ஒன்றாக எழுந்தருளி காட்சி அளித்தனர். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நந்தியம் பெருமானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அதிகமாக திரண்டதால், போலீசார் தடுப்பு வைத்து தடுத்தனர். ஆனால் அதன் மேல் பக்தர்கள் ஏறிச்சென்றனர். பக்தர்கள் கோவிலினுள் செல்ல போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யாததால், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் வந்த பெற்றோர் கடும் அவதிக்கு ஆளாகினர். கோவில் கோசாலையில் பசுக்களை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.