பதிவு செய்த நாள்
17
ஜன
2023
09:01
வெண்ணந்துார்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே, அத்தனுார் எட்டுப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் கடந்த, 60 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர்.
வெண்ணந்துார் அருகே உள்ள அத்தனுார், ஆயிபாளையம், கோம்பக்காடு, அத்தனுார்புதுார், தட்டான்குட்டைபுதுார், ஆலங்காடுபுதுார், உடும்பத்தான்புதுார், தாசன்புதுார் ஆகிய, எட்டு கிராமங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. இந்த கிராமங்களில், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் விசைத்தறி, விவசாயம், கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன், நிலச்சுவான்தாரர் ஒருவர் பொங்கல் பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடியதாகவும், அப்போது ஊரில் உள்ள பெரும்பான்மையோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஊர் மக்கள் பிரசித்தி பெற்ற அத்தனுார் அம்மனிடம் முறையிட்டனர். அப்போது, அங்குள்ள ஒருவர் அருள்வாக்கு கூறியபோது, பொங்கல் பண்டிகை கொண்டாடியதால் தான் ஊரில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அம்மை நோய் வந்துள்ளது. இனிமேல் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாம் எனவும் கூறியதாகவும் இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே, கிராம மக்கள் நலமாக இருக்கவும், கால்நடைகளுக்கு எந்த நோயும் வராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த எட்டு கிராம மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு செய்து பின்பற்றி வருகின்றனர்.