சீர்காழி சட்டநாதர் கோயிலில் தோரணவாயில் அமைக்க தருமபுரம் ஆதீனம் அடிக்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2023 11:01
மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு மே 24ல் கும்பாபிஷேகம்- தோரணவாயில் அமைக்க தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்.
சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு மே 24ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தோரணவாயில் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டை வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோவில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோவிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோவில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பக்தர்கள் மனதில் வேண்டுபவற்றை வேண்டிய மாத்திரத்திலேயே அருளும் சட்ட நாதர் கோவிலின் திருப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகளை விரைந்து முடித்து மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கிழக்கு கோபுரத்திற்கு முன்பு தோரண வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில், வக்கீல் பாலாஜி, அரசு மருத்துவமனை மருந்தாளுநர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.