ராமேஸ்வரம்: நாளை (ஜன., 21) தை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் ஸ்ரீராமர் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்த வாரி கொடுக்கும் உற்சவம் நடக்கும்.
நாளை தை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து காலை 5 மணி முதல் 5 30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், இதனை தொடர்ந்து கால, சாயரட்சை பூஜைகள் வரை நடைபெறும். காலை 11 மணிக்கு கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருள்வார். பின் மதியம் 12 மணிக்கு அங்கு கூடியிருக்கும் பக்தர்களுக்கு கோயில் குருக்கள் தீர்த்தம் வாரி கொடுக்கும் உற்சவம் நடக்கும். அப்போது ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவார்கள். அன்று பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். மாலை 5:30 மணிக்கு மண்டகபடியில் தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் ஸ்ரீ ராமர் புறப்பாடு நடக்கும் என கோயில் துணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.