சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் பாரம்பரிய சந்து மாரியம்மன் கோயில் விழா துவங்கியுள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் தெரு முச்சந்திகளில் மாரியம்மனுக்கு விழா எடுத்து வழிபட்டு வருகின்றனர் மக்கள் தொகை அதிகரிப்பு நகர்ப்புற விஸ்தரிப்பு காரணமாக தற்போது 30க்கும் மேற்பட்ட தெருக்களில் இந்த விழா ஆண்டுதோறும் நடக்கிறது. செவ்வாய்க்கிழமை தோறும் முந்தைய வாரத்தில் திருவிழா சாட்டுதல் நடக்கிறது. அடுத்த வாரத்தில் மேளதாளத்துடன் பிருந்தாவனத் தோப்பில் கரகம் பாலித்தலுடன் விழா துவங்கும். அலங்கரிக்கப்பட்ட கரகத்தை பூசாரி எடுத்து வர நகர்வலம் நடக்கும். பின்னர் முச்சந்தியில் அமைத்துள்ள பந்தலை கரகம் வந்தடையும். முளைப்பாரி அழைப்பு, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவர். சிறப்பு பூஜைகள், அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள், திருவிளக்கு வழிபாடு உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா, வெவ்வேறு தெருக்களில் மும்முரமாக நடக்கிறது.