பதிவு செய்த நாள்
10
பிப்
2023
05:02
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உத்ஸவம் பிப்.26 ல் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்.25 மாலை 6:00 மணிக்கு , சேனை முதல்வர் புறப்பாடு நடக்கிறது. பிப்.26 காலை 7:30 மணிக்கு பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கொடிமரத்திற்கு புறப்பாடாகி சுவாமிக்கும், கொடிமரத்திற்கும் பூஜைகள் நடந்து காலை 10:36 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும். மாலையில் காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கும். இரவில் பல்லக்கில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியருடன் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன்,கருடன்,சேஷன், குதிரை, வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். 6ம் திருநாளில் மாலையில் சூர்ணாபிேஷகம், தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். மார்ச் 6 ஒன்பதாம் திருநாள் காலையில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளம் எழுந்தருளலும், காலை 10:00 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மார்ச் 7 ல் காலை 10:46 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும். மறுநாள் காலை சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும். தெப்பத்தை முன்னிட்டு தி.வைரவன்பட்டி தெப்பக்குளத்தில் நீர் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.