பதிவு செய்த நாள்
10
பிப்
2023
05:02
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில், இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, ஈஷா அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா, வரும் பிப்ரவரி 18ம் தேதி மாலை, 6:00 மணி முதல் மறுநாள் காலை, 6:00 மணி வரை ஆதியோகி முன்பு மிகச்சிறப்பாக நடக்க உள்ளது. இவ்விழாவில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள் தாமிரபரணி என்ற பிரிவை தேர்வு செய்து பெயர், மொபைல்போன் எண், இமெயில் முகவரி போன்றவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த முன்பதிவு நடைபெறும். முன்பதிவு செய்த பின், விழாவில் பங்கேற்பதற்கான இ-பாஸ், பதிவு செய்தவர்களின் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பிப்ரவரி 18ம் தேதி, ஈஷாவிற்கு வரும்போது, மலைவாசல் அருகே இருக்கும் நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில், இந்த இ-பாஸை காண்பித்து, நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்விழா, மாலை 6:00 மணிக்கு தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் துவங்கும். இதில், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, சக்தி வாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன், விடிய விடிய விழா களைகட்ட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.