பதிவு செய்த நாள்
08
செப்
2012
11:09
தஞ்சாவூர்: வேளாங்கண்ணி கோவில் திருவிழாவில் பங்கேற்கச் செல்லும் வழியில், போப் ஆண்டவரின் இந்திய பிரதிநிதி சால்வாடோர், நேற்று காலை தஞ்சாவூர் வருகை தந்தார்.நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கோவில் திருவிழா, 29ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக துவங்கியது. தஞ்சை மணிமண்டபம் அருகிலுள்ள இல்லத்தில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸை, போப் பிரதிநிதி சந்தித்தார். அப்போது, அவரை பூங்கொத்து கொடுத்து ஆயர் வரவேற்றார். போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதி சால்வாடோர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடப்பாண்டு வேளாங்கண்ணி கோவில் திருவிழாவில் பங்கேற்பது, எனக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக, நல்லிணக்கத்தின் தோற்றமாக அமைந்துள்ள, அன்னை கன்னி மரியாள் பரிந்துரையில் அமைதி நிலவ, இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜூன் மாதம் போப் ஆண்டவரை சந்தித்து, வேளாங்கண்ணி கோவிலுக்குச் செல்லவுள்ளதாகக் கூறினேன். எனக்கு பாத்திரம் ஒன்றை அவர் அன்புடன் வழங்கினார். அதை, தற்போது கொண்டு வந்துள்ளேன். இந்த பாத்திரம், வேளாங்கண்ணி கோவில் விழா திருப்பணியில் பூஜைக்கு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.