பதிவு செய்த நாள்
15
பிப்
2023
09:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவ பெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. கூரத்தாழ்வானின் 1,013வது திருவவதார மஹோத்ஸவம், கடந்த 1ல், திருப்பல்லக்கு உற்சவத்துடன் துவங்கியது.
தினமும் காலையில் பல்லக்கிலும், இரவு ஸிம்மம், யாளி, மங்களகிரி, கமலாசனத்தொட்டி, சூரிய பிரபை, குதிரை, சந்திர பிரபை, யானை, ஹம்ஸம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளிய கூரத்தாழ்வான், முக்கிய வீதி வழியாக உலா வந்தார். ஒன்பதாம் நாள் உற்சவமான கடந்த 9ல், தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், 13ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம், காலை மூன்றாம் நாள் திருமஞ்சனமும், இரவு 8:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. மல்லி, சாமந்தி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய கூரத்தாழ்வான், கூரம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.