மதங்களைக் கடந்த குலதெய்வ வழிபாடு சீலைக்காரியாக வந்த இஸ்லாமிய சகோதரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2023 06:02
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி விழாவில் குலதெய்வ வழிபாடு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மத கோட்பாடுகளைக் கடந்து இஸ்லாமிய பெண்கள் சீலைக்காரியை குலதெய்வமாக வழிபடும் நிகழ்வும், தங்கள் குலதெய்வத்திற்கு இஸ்லாமிய சமூகத்தினரிடம் மட்டுமே வாடைப்பொடி வாங்கி வழிபடும் நிகழ்வுகளும் நடைபெற்றது. மகாசிவராத்திரி தினத்தை உசிலம்பட்டி பகுதி மக்கள் குலதெய்வ வழிபாட்டுக்குரிய நாளாக கொண்டாடுகின்றனர். எந்த பகுதியில் வசித்தாலும் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் தனிப்பட்ட முறையில் பாரம்பரிய நிகழ்வுகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர்.
சீலைக்காரியாக வந்த இஸ்லாமிய சகோதரி: உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் கன்னியம்பட்டியில் 21 தெய்வங்களுடன் காத்தாண்டம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள சீலைக்காரி அம்மனை இஸ்லாமிய பெண்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். மாசிப்பச்சைக்கு வரும் இவர்களில் சிலருக்கு சீலைக்காரி அம்மன் இறங்கி சாமியாடி குறிசொல்கின்றனர். பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் தருவதுடன் தாங்களும் பூசிக்கொள்கின்றனர்.
பரமன் ஓய்வு தாசில்தார்: சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெருங்காமநல்லூரைச் சேர்ந்த எங்கள் பெரியவர் தும்மக்குண்டு செல்லும் போது ஆதரவற்ற நிலையில் இரு குழந்தைகளுடன் வந்த மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த இஸ்லாமிய சமூக பெண்ணை தனது மகளாக இரு என அழைத்து வந்தார். தனது சொத்துக்களை பகிரும்போது தனது இரண்டு மகன்கள், இஸ்லாமிய சகோதரி என மூன்று பங்காக பிரித்துக் கொடுத்தவர், மகள் வழிபட சீலைக்காரி அம்மனையும் வழங்கியுள்ளார். அந்த மகள் வழிப் பேரன்கள் பெரியவர்களானவுடன் அவர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவர்கள் வழிவந்தவர்கள் மதுரை விளாச்சேரி, பேரையூர், உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளில் முஸ்லீம்களாகவே வாழ்ந்து வருகின்றனர். மாசிப்பச்சை குலதெய்வ வழிபாட்டுக்கு வரும் இவர்கள் பெருங்காமநல்லூரில் உள்ள பெட்டி வீட்டில் காத்தாண்டம்மன், சீலைக்காரி பூஜை பெட்டிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பூசாரியிடம் பெட்டியை எடுத்து கொடுத்து, கன்னியம்பட்டியில் உள்ள கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். எங்கள் சகோதரிகளைப்போல் மரியாதை செலுத்தி கோயிலில் இவர்கள் பொங்கல் வைத்த பின் தான் மற்ற சாமிகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடும் நடத்துகிறோம். சிலருக்கு அம்மன் இறங்கி சாமியாடுவதும் உண்டு. அப்போது அருள்வாக்கு சொல்வதுடன் விபூதி பிரசாதமும் தருகின்றனர். அவர்கள் வீட்டில் துக்க நிகழ்வுகள் நடந்தால் நாங்கள் இன்றும் பிறந்த வீட்டு கோடி கொண்டு தருகிறோம். அதே போல் எங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளிலும் அவர்கள் கலந்து கொள்கின்றனர். பாரம்பரியமாக இந்த நிகழ்வு நடந்து வருகிறது என்றார்.
வாடைப்பொடி கருப்பு: இதே போல் உசிலம்பட்டி அருகே பொட்டல்பட்டி ஆனையூர் சின்னகண்மாய் கரை அருகில் உள்ள வாடைப்பொடி கருப்பு கோயிலில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மட்டுமே மாசிப்பச்சை குலதெய்வ வழிபாடு நடக்கும் போது வாடைப்பொடி விற்பனை செய்கின்றனர். மதுரையை இஸ்லாம் சமூகத்தினர் ஆட்சி செய்த போது இங்கு வந்தவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னும் இந்த பகுதியில் வசித்து வந்தனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மாசிப்பச்சை குலதெய்வ வழிபாட்டுக்கு அவர்கள் பூக்களைக் கொண்டு செய்த வாடைப்பொடியை மட்டும் வாங்க வேண்டும் என எங்கள் முன்னோர்கள் வாக்கு கொடுத்தபடி இப்போதும் அவர்கள் மட்டுமே இங்கு வாடைப்பொடி விற்பனை செய்கின்றனர். பாரம்பரியமாக இந்த நிகழ்வு நடக்கிறது என தெரிவித்தனர்.