பதிவு செய்த நாள்
21
பிப்
2023
10:02
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, புட்லுார் ராமாபுரத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பக்தர்களால் புற்றுக்கோவில் என்றும், பூங்காவனத்தம்மன் என்றும் அழைக்கப்படும் இக்கோவிலில், ஒவ்வொரு மாசி சிவராத்திரிக்கு அடுத்த அமாவாசை தினத்தன்று மயான கொள்ளை உற்சவம் நடைபெறும். நேற்று மதியம், இக்கோவிலில் மயான கொள்ளை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மஹா சிவராத்திரி தினத்தில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்றிரவு அம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்தார். மயான கொள்ளையை முன்னிட்டு, நேற்று மதியம், கோவில் குளம் அருகில் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். இதில், பக்தர்கள் விரதம் இருந்து, பக்தியுடன் பங்கேற்றனர். பின், கோவில் அருகில் உள்ள இடுகாட்டில் நடைபெற்ற மயான கொள்ளையில், திரளான பக்தர்கள் பங்கேற்று, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.