பதிவு செய்த நாள்
21
மார்
2023
10:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகு சிறப்புடன் நடந்தது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13 நாட்கள் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அமாவாசை நாளான இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி பெரிய மாரியம்மனை தரிசித்து, நகரில் உள்ள பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து, ரத வீதி சுற்றி வந்தனர். மதியம் 1:15 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, வீதி உலா துவங்கியது. இதனையடுத்து பக்தர்கள் தீ மிதிக்க துவங்கினர். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தேனி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து பூக்குழி இறங்கி, தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தினர். நகரின் பல்வேறு பகுதிகளில் தனி நபர்கள், பொது நல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கினர். விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் வளர்மதி மற்றும் பல்வேறு கோயில் செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று மார்ச் 22 காலை 11 :15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.