தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் பக்தர்களின் வசதிக்காக நீர் நிரப்பும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2023 10:03
தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்காக பக்தர்களின் வசதிக்காக தெப்பக்குளம் முழுமையாக தூர் வரப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை, தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5ந் தேதியும்,மின் அலங்கார தேர்பவனி 6 ந் தேதி இரவும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கோயில் முன்பாக உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் மாசடைந்த நிலையில் இருந்ததையடுத்து பக்தர்கள் அதனை அகற்றி புதிதாக நீரை நிரப்பும்படி கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் மூலம் கடந்த சில நாட்களாக மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று முடிவடைந்து தெப்பக்குளத்தில் இருந்த சகதிகளை மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு அகற்றி சமப்படுத்தி அருகிலுள்ள போர்வெல்களில் இருந்து குழாய்கள் மூலம் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. இதனையடுத்து பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.