பதிவு செய்த நாள்
23
மார்
2023
09:03
அன்னூர்: சித்தர்கள் வழிபட்ட சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.
அன்னூர் அருகே சாலையூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சித்தர்கள் வழிபட்ட பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் கருவறை, மகா மண்டபம், அர்த்தமண்டபம், கோபுரம், பரிவார சன்னதிகள் கட்டி திருப்பணி செய்யப்பட்டது. கடந்த பிப். 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து பிப். 2 ம் தேதி 48 நாள் மண்டல பூஜை துவங்கியது. தினமும் இரவு 7:00 மணிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. மதியம் பழனி ஆண்டவருக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. மாலையில் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அலங்கார பூஜை நடந்தது. பல்லடம் அனுப்பப்பட்டி ஆசிரியர் பழனிச்சாமி தலைமையில் வள்ளி கும்மியாட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என 100 பேர் பாடலுக்கு ஏற்ப நளினமாக கும்மியாட்டம் ஆடி பக்தர்களை கவர்ந்தனர். செஞ்சேரி ஆதீனம் சிவராம சாமிகள், அவிநாசி சின்னசாமி சித்தர் உள்பட 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.