உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 04:03
திருக்கோவிலூர்: நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
முதல் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் நாளை காலை கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. தினசரி காலை, மாலை இரு வேலையும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் நாள் ஏப்ரல் 2ம் தேதி இரவு 8:00 மணிக்கு பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 7ம் நாள் மாலை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 9ம் நாளான ஏப்ரல் 6ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்குகிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், தேவஸ்தான பவர் ஏஜெண்ட் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.