பதிவு செய்த நாள்
18
ஏப்
2023
04:04
அவிநாசி: அவிநாசி வட்டம், நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட கோமளவல்லி உடனமர் கோட்டீஸ்வர சாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட சிவளாபுரி அம்மன் கோவிலில் 37ம் ஆண்டு குண்டம் திருவிழாவில்,ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கினர்.
அவிநாசி அடுத்த நடுவச்சேரியில் எழுந்தருளியுள்ள கோமளவல்லி உடனமர் கோட்டீஸ்வர சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட சிவளாபுரி அம்மன் கோவிலில் 37ம் ஆண்டு குண்டம் திருவிழா, நடைப்பெற்றது. முன்னதாக, கடந்த 16ம் தேதி ஞாயிறன்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மஞ்சள் நீர் கிணறுக்கு சென்று வருதல் நிகழ்ச்சி, 17ம் தேதி அபிஷேகம், மதியம் குண்டம் திறப்பு, அக்கினி பூ போடுதல், நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அன்று இரவு தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குண்டம் திருவிழாவில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில்,குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளை மறுபூஜை,மஞ்சள் நீராட்டு, சாமி சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகின்றது. குண்டம் திருவிழா நாட்களில்,உபயதாரர்கள் மற்றும் கோவில் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.