திருப்பரங்குன்றம் தேர் பாதுகாக்கப்படுமா : பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2023 04:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு எதிரே நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைர தேரை பாதுகாக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோயிலுக்கு சொந்தமான பெரிய வைர தேர் கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பங்குனி திருவிழாவில் திருக்கல்யாணம் முடிந்து மறுநாள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை இந்த தேரில் எழுந்தருள கிராமத்தினர், பக்தர்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இருக்க ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தேர் கிரிவலப் பாதையில் வலம் வரும். இந்த ஆண்டு ஏப். 9ல் பங்குனி தேரோட்டம் நடந்தது. வழக்கமாக தேரோட்டம் முடிந்த இரண்டு நாட்களில் தகரங்கள், கண்ணாடிகளால் மூடி தேர் பாதுகாக்கப்படும். தேரோட்டம் முடிந்து பத்து நாட்களாகியும் தேர் மூடப்படவில்லை. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பாழ்படுகிறது. இதுபோன்ற தேர் செய்வதை தற்போது நினைத்துகூட பார்க்க முடியாது. உடனடியாக தேரை மூடி பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.