ரெங்கா ரெங்கா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2023 08:04
திருச்சி : லட்சக்கணக்கான பக்தர்களிடையே சித்திரை தேரில் நம்பெருமாள் எழுந்தருள ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 8 ம் நாளான நேற்று நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று (19ம் தேதி) நடைபெற்றது. முன்னதாக, நம்பெருமாள் தோளுக்கினியானில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சித்திரை தேர் மண்டபம் வந்தார். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் துவங்கியது. ரெங்கா ரெங்கா கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.