பதிவு செய்த நாள்
19
ஏப்
2023
10:04
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில், தரிசனம் செய்த தமிழக கவர்னர் ரவி, தொடர்ந்து மீனவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகத்திற்கு தரிசனம் செய்ய வருகை தந்த தமிழக கவர்னர் ஆர். என்.ரவியை, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி தலைமையில், பூரண கும்பம் மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்றனர். தொடர்ந்து கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களை கவர்னர் ரவி வழிபாடு செய்தார். நவக்கிரக வழிபாட்டை தொடர்ந்து கடலடைத்த பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த கவர்னர், மீனவர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மீனவ சிறுவர்கள் நிகழ்த்திய யோகா நிகழ்ச்சியை ரசித்த கவர்னர் பின்பு மீனவர்களுடன் உரையாற்றினார். கவர்னர் பேசியதாவது; மீனவர் சமுதாயம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் நான் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். மீனவர் சமுதாய மூலமே, கடலில் கிடைக்கக்கூடிய கடல் உணவுகள் மற்றவர்களுக்கு கிடைத்து வருகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மீனவர்களின் வாழ்க்கை, மிகவும் கடினமானதாக உள்ளது. இயற்கை சீற்றங்களான புயல், சுனாமி, உள்ளிட்டவைகளை முதலில் கண்டறிபவர்களும், பாதிக்கப்படுபவர்களும் மீனவர்களாகவே உள்ளனர்.
பாரத பிரதமர் மோடி மீனவர்களின் துயரங்களை முழுமையாக அறிந்தவராக உள்ளதால், மீனவர்கள் உள்ளிட்ட, அடித்தட்டு மக்களை பற்றியே முழுமையாக சிந்தித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இன்னும் 25 ஆண்டுகளில், மீனவர்களின் குழந்தைகள் கல்வியில் உயர்ந்து, டாக்டர் இன்ஜினியர் கலெக்டர் உள்ளிட்ட பணிகளில் அதிக அளவில் பணியாற்றும் வகையில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை மீனவர் மாணவர்களுக்கு செயல்படுத்தி வருகிறார். ஜூன் 21 இல் நடைபெறும் சர்வதேச யோகா தினத்திலும், குடியரசு, சுதந்திர தின விழாக்களிலும், மீனவ சமுதாய மாணவர்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மீனவர்கள் கடலோர கிராமங்களில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை மற்றும் பைபர் படகுகளுக்கு கூடுதல் டீசல் மானியம் உள்ளிட்ட தேவைகளை குறித்து கேட்டபோது, மீனவர்கள் பிரச்சனைகள் அனைத்தும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தங்களது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மீனவர் சந்திப்பு கூட்டத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கவர்னர் யோகா மற்றும் சிலம்பம் சுற்றிய மாணவர்கள் மற்றும் மீனவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். கவர்னர் மீனவர்கள் மத்தியில் பேசியதை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவர் விவேகபாரதி 17, தமிழில் மொழி பெயர்த்தார்.