பதிவு செய்த நாள்
23
ஏப்
2023
03:04
தஞ்சாவூர், குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதையடுத்து திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர்கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில், ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் ஒரு முழு சுபகிரகமாக அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு நேற்று நள்ளிரவு 11.21 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குருபகவானுக்கு வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அதிகாலை 2:00 மணி வரை கோவில் நடை திறந்து இருந்தது. அப்போது, மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசி காரர்கள் பரிகாரம் செய்தனர். குரு பெயர்ச்சியை தொடர்ந்து வரும் மே.1ம் தேதி லட்சார்ச்சனையும், மே.2,3 ஆகிய தேதிகளில், சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறுகிறது.