பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
05:04
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் மே 4 அன்று கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. நேற்று இரவு 7:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இன்று காலை 9:45 மணிக்கு கோயில் கொடி மரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டு, அபிஷேகம், மகாதீப ஆராதனை நடந்தது. தினமும் சுவாமி, அம்பாள் சிம்மாசனம், நந்தி, கிளி, குண்டோதரன், சிம்ம, கற்பக விருட்ஷம், காமதேனும், ரிஷப வாகனங்களில் வீதி வலம் வர உள்ளார். ஏப்., 30 காலை நடராஜர் புறப்பாடு, இரவு குதிரை வாகனத்தில் திக்விஜயம் நடக்கும். மே 1 காலை விசாலாட்சி அம்மன் கமல வாகனத்தில் தபசு திருக்கோலமும், மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே 2 காலை 11:00 - 12:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை, பூ பல்லக்கில் பட்டணப் பிரவேசம் வர உள்ளனர். மே 3 காலை 9:15 மணி முதல் ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மே 4 தீர்த்தவாரியுடன் இரவு கொடி இறக்கமும், மறுநாள் உற்சவ சாந்தி அபிஷேகம் நடந்து விழா நிறைவடையும்.
*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஏப்., 30 காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்குகிறது. மே 4 காலை கும்ப திருமஞ்சனமும், அன்று இரவு 2:00 மணிக்கு மேல் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, வளரி, ஈட்டி, வால் ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். மே 5 காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.