பதிவு செய்த நாள்
04
மே
2023
10:05
கோபால்பட்டி, : சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சக்தி காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் நடந்த விழாக்களில் பாரிவேட்டை எனும் புலி வேட்டை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழா ஏப்.25 ல் சுவாமி சாட்டுதல் , காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சக்தி காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் பூக்களால் அலங்கரித்து கரகம் ஜோடித்து வானவேடிக்கை ,தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. நேற்று மாவிளக்கு, அக்னி சட்டி, பொங்கல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். மாலையில் நடந்த பாரிவேட்டை எனும் பாரம்பரிய புலி வேட்டையில் இளைஞர்கள் புலி வேஷம் அணிந்தும், புலியை வேட்டையாடுவது போல் நடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் விஜயா வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர் அமிர்ததர்ஷினி ராஜா, சமூக ஆர்வலர் சவுந்தர்ராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.