பதிவு செய்த நாள்
04
மே
2023
10:05
காரியாபட்டி: காரியாபட்டி எஸ்.தோப்பூரில் வளரி வீரன், ஊர்க்காவல் வீரன் சிற்பங்கள் இருப்பதாக கிழவனேரியைச் சேர்ந்த கண்ணன், பாண்டியநாடு பண்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன், சிவகாசி பிரபு, உதவிப்பேராசிரியர் ரமேஷ் கள ஆய்வு செய்து, கண்டறிந்தனர்.
அவர்கள் கூறியதாவது: வளரி வீரன் : தமிழகத்தில் நம் முன்னோர்கள் கையாண்ட போர்முறை கருவிகளில் வளரியும் ஒன்று. வளரி பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக புறநானூறு பாடல்களில் வளரி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. வளரிக்கு வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, கள்ளர்தடி, படைவட்டம், எரியும்தடி போன்ற பெயர்களில் அறியப்படுகிறது. வளரியை வைத்து நம் முன்னோர்கள் மான் வேட்டை, ஆநிரைகவர்தல் போர், தப்பி ஓடிய வீரர்களை பிடிக்க, தொலைவில் உள்ளவற்றைத் தாக்க பெரும் உதவியாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மருது சகோதரர்கள் வளரியை அதிகளவு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது கண்டறியப்பட்ட வளரி வீரன் சிற்பமானது 3 அடி உயரம், 2.5 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. வீரனது தலையில் இடது புறம் சரிந்த கொண்டை, நீண்ட காதுகள், மார்பில் வீரச் சங்கிலி, இடையில் இடைக்கச்சை செதுக்கப்பட்டுள்ளது. இடையில் வளரி இடம்பெற்றுள்ளது. கைகளில் அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையானது வளரியை பிடித்த படியும், வலது கையில் வாளினை உயர்த்திப் பிடித்தபடி செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரனுக்கு வலது புறத்தில் அவரது மனைவி மலர் சென்டினை பிடித்தபடி ஆபரணங்களுடன் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிற்பத்திற்கு மேல் புறத்தில் தோரணம் போன்ற அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. கீழ்புற திண்டும் அலங்கார வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் சுகாசன கோளத்தில் அமர்ந்தவாறு சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் வடிவமைப்பை பார்க்கும்போது போரில் வீர மரணம் அடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் எனலாம். சிற்பத்தின் அமைப்பு விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்ததாகவும், 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பமாகவும் கருதலாம்.
காவல் வீரன் சிற்பம்: வளரி வீரன் சிற்பத்திற்கு இடதுபுறம் ஒரு வீரன் வணங்கியபடி தனிச் சிற்பமாக 3 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரனின் இடையில் குறுவாள் இடம்பெற்றுள்ளது. காலின் அடியில் வேட்டை நாயின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. வீரன் காவலில் ஈடுபடும்போது துணையாக நாய் இருந்திருக்க வேண்டும். இவ்வீரன் ஊர்காவலின்போது இறந்திருக்க வேண்டும். வீரனோடு நாயும் இறந்திருக்க வேண்டும். அதன் காரணமாக நடுகல் எடுத்திருக்க வேண்டும். இச்சிற்ப அமைப்பு நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம். சற்று தொலைவில் கட்டட இடிபாடுகளின் அருகே ஒரு வீரன் சிற்பம், அவரது மனைவி சிற்பம் வணங்கியபடி காணப்படுகிறது. வீரனின் இடையில் குறுவாள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் நன்கு ஆபரணங்கள் அணிந்தபடி சிற்பம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சிற்பங்களை காணும் போது, எஸ். தோப்பூர் முற்காலங்களில் சிறந்து விளங்கி வந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.