அன்னூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவில் பல்வேறு காவடிகளில் வந்து பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
மாரியம்மன் கோவில், 33ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 18ம் தேதி துவங்கியது. தினமும் மதியம் அபிஷேக ஆராதனையும், மாலையில் கம்பம் சுற்றி ஆடுதலும் நடந்தது. நேற்று மதியம், பால், தயிர், நெய் என பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர். மாலையில் தரையில் இருந்து 20 அடி உயரத்தில் பறவை காவடியாக பக்தர் ஒருவர் கிரேன் வாயிலாக 200 மீட்டர் தொலைவிற்கு வந்து அம்மனை தரிசித்தார். இதே போல் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து வந்து அம்மனை தரிசித்தனர். இரவு கவிஞர் ராமகிருஷ்ணன் அம்மன் மகிமை என்னும் தலைப்பில் பேசினார். இன்று காலை மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் வழியாக உலா வந்து அருள்பாலித்தார்.