உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2023 11:05
உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாத சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவாலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை உற்ஸவ விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். கடந்த ஏப்.,26 அன்று மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கோயில் ஸ்தானிய குருக்களால் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. உற்ஸவர் அம்மனுக்கும் காப்பு கட்டப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பத்து நாட்களும் இரவில் பல்வேறு வகையான அலங்கார சிறப்பு வாகனங்களில் உற்ஸவர் அம்மன் நான்கு ரத வீதிகளிலும் உலா நடந்தது.
நேற்று காலை 5:30 மணி அளவில் மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள அலங்கார திருமண மண்டபத்தில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இன்று மாலை 4:00 மணியளவில் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பெரிய தேரில் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாத சுவாமி மற்றும் பிரியாவிடை உடன் தேரோட்டம் நடந்தது. அலங்கார தீபாராதனை நடந்த உடன் சிவ சிவ அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தேரின் வடத்தினை பிடித்து இழுத்து உலா வந்தனர். இரவு 7 மணி அளவில் தேர் இருப்பிட நிலைக்கு வந்தது. அப்போது பக்தர்கள் மீது சிவாச்சாரியார்கள் பூக்கள் தூவினர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். உத்தரகோசமங்கை சட்டிசாமி மடத்தில் இருந்து காலை முதல் மதியம் வரை அன்னதானமும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பில் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. சிலம்பொலி லோக சுப்பிரமணியன் குழுவினரின் கட்டைக்கால் ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட ஆடியபடி தேரின் முன்பாக சென்றனர்.