பதிவு செய்த நாள்
20
மே
2023
11:05
குவஹாத்தி; அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஏழு புனித தலங்களை, படகில் சென்று தரிசிக்கும் சிறப்பு திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள குவஹாத்தியைச் சுற்றி ஏராளமான புனித தலங்கள் உள்ளன.
கோரிக்கை: குறிப்பாக, இங்குள்ள காமாக்யா, பாண்டுநாத், அஸ்வக்லந்தா, தவுல் கோவிந்தா, உமானந்தா, சக்ரேஷ்வர், அவுனியாதி சத்ரா ஆகிய புனித தலங்கள் பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்து உள்ளன. இந்த கோவில்களுக்கு, நாடு முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். இந்த ஏழு புனித தலங்களையும் ஒரு சேர விரைவாக தரிசிக்க, உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த ஏழு இடங்களையும், பிரம்மபுத்ரா நதியில் படகில் சென்று தரிசிக்கும் சிறப்பு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அசாம் அரசு நேற்று கையெழுத்திட்டது. சாகர்மாலா திட்டம், இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம், அசாம் சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன், 45 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
புதிய அத்தியாயம்: இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஏழு புனித தலங்களை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், ஒரே டிக்கெட்டில் படகு வாயிலாக சென்று அனைத்து இடங்களையும் பார்க்கலாம். அதே சமயம், பயணியர் விருப்பத்துக்கேற்ப அங்கேயே தங்கி தரிசிக்கவும் இத்திட்டத்தில் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே சமயத்தில் ஏழு இடங்களையும் தரிசிக்கும் போது, ஒட்டுமொத்த பயணமும் இரண்டு மணி நேரத்தில் முடியும். ஓராண்டிற்குள் இந்த திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த திட்டத்தில் கையெழுத்திட்ட அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, இந்த முயற்சி, மாநிலத்தின் சுற்றுலாத்துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும், என்றார்.